Wednesday, 15 July 2015

நெருக்கடி நிலையிலிருந்து கற்காத பாடங்கள் - சுப்பிரமணியன் சுவாமி


2000-ல் நெருக்கடி நிலையின் 25-வது ஆண்டு நிறைவடைந்தபோது, பாஜக-வின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்து 13.06.2000-ல் ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழில் சுப்பிரமணியன் சுவாமி எழுதிய கட்டுரை.
வரலாற்றின் அலமாரியிலிருந்து ஒரு கட்டுரை...
நெருக்கடி நிலையின் 25-வது ஆண்டு நினைவு தினம் தொடர்பாகக் கூட்டங்களை நடத்தப்போவதாக பாஜக அறிவித்திருப்பது அபத்தமானது. 1975-77 நெருக்கடி நிலை காலகட்டத்தில் நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்தின்போது பாஜக / ஆர்எஸ்எஸ் தலைவர்களில் பெரும்பாலானோர் துரோகம் இழைத்தனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அப்போதைய தலைவர் பாளாசாகேப் தேவரஸ், புணேயின் எரவாடா சிறையில் இருந்து இந்திரா காந்திக்குப் பல மன்னிப்புக் கடிதங்களை எழுதினார் என்பது மகாராஷ்டிர சட்டப்பேரவை நிகழ்ச்சிகளின் ஆவணங்களில் பதிவாகியிருக்கிறது. போராட்டத்திலிருந்து ஆர்எஸ்எஸ் விலகிக்கொள்வதாகவும், இந்திரா காந்தியின் 20 அம்சத் திட்டத்துக்காகப் பணிபுரியத் தயாராக இருப்பதாகவும் அந்தக் கடிதங்களில் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், அவர் எழுதிய எந்தக் கடிதத்துக்கும் இந்திரா காந்தி பதில் எழுதவில்லை. அடல் பிஹாரி வாஜ்பாயும் இந்திரா காந்திக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். அதை இந்திரா ஏற்றுக் கொண்டார். உண்மையில், 20 மாதங்கள் அமலில் இருந்த நெருக்கடி நிலையின்போது பெரும்பாலான சமயங்களில் பரோலில் வெளியில் வந்தார் வாஜ்பாய். அரசுக்கு எதிரான எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கப்போவதில்லை என்று எழுத்துபூர்வமாக இந்திரா காந்திக்கு அவர் உறுதியளித்திருந்தார். நல்ல விதமாக நடந்துகொள்வதாக உறுதியளித்ததன் பேரில் சிறையில் இருந்து வெளியே வந்த ஜன சங்க உறுப்பினர்கள்பற்றி அகாலி தலைவர் சுர்ஜித் சிங் பர்னாலா எழுதிய புத்தகம் பிரமாதமாக விவரித்திருக்கிறது.
ஆர்எஸ்எஸ் தந்த அதிர்ச்சி
நம்மில் பலர் அவரவர் வழிகளில் நெருக்கடி நிலையை மிகக் கடுமையாக எதிர்த்தோம். அத்தனை பெருமையும் முதலில் மொரார்ஜி தேசாய்க்கும் ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கும்தான் செல்ல வேண்டும். 78 வயதான மொரார்ஜி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சண்டிகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஜெயப்பிரகாஷ் நாராயணின் இரண்டு சிறுநீரகங்களும் மர்மமான முறையில் செயலிழந்த பின்னர், ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தியா ஒட்டுமொத்தமாக நெருக்கடி நிலைக்குப் பணிந்ததையும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் மாற்றத்தையும் அறிந்த அவர் அதிர்ந்துபோனார். எனினும் அவர் பின்வாங்கவில்லை. தலைமறைவாக இருந்த எனக்கு 1975 ஆகஸ்ட் மாதம் ஒரு செய்தியை அனுப்பினார். வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று, நெருக்கடி நிலைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யுமாறு என்னைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
மொரார்ஜியோ மிகவும் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் இருந்தார். நல்ல விதமாக நடந்துகொள்வதாக உறுதியளித்தால் மொரார்ஜியைப் பரோலில் வெளிவிடத் தயார் என்று இந்திரா காந்தி கூறியனுப்பினார். ‘வெளியில் வந்தவுடன் உடனடியாக மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவேன்’ என்று மொரார்ஜி சொல்லியனுப்பினார். இதைக் கேட்டு அழுத அவரது மருமகள் பத்மா, அவரது வயதைக் கருத்தில்கொண்டு அரசின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சினார். ஆனால், அதைவிடச் சாவதே மேல் என்று கூறினார் மொரார்ஜி.
ஆர்எஸ்எஸ்ஸின் எல்லாத் தலைவர்களும் பணிந்து விடவில்லை என்பதையும் நான் சொல்லியே ஆக வேண்டும். மாதவ்ராவ் மூளே, தத்தோபந்த் டெங்கடி மற்றும் மோரோபந்த் பிங்ளே போன்றோர் விதிவிலக்குகள். மூளேவுக்கு என்னை மிகவும் பிடிக்கும். நான் வெளிநாட்டில் இருந்தபோதும், இந்தியாவில் தலைமறைவாக இருந்தபோதும் என்னை முழுமையாக ஆதரித்தார். ஆனால், 1976 நவம்பரில், மீண்டும் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லுமாறு கலங்கிய கண்களுடன் என்னிடம் கூறினார். நெருக்கடி நிலைக்கு முழுமையாகப் பணிந்துவிடுவது தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையெழுத்திட 1977 ஜனவரி இறுதியில் ஆர்எஸ்எஸ் முடிவுசெய்திருப்பதாக என்னிடம் அவர் கூறினார்.
போராட்டத்தைப் பற்றி விசாரித்தேன். 42-வது சட்டத் திருத்தத்துக்கு அனைவரும் ஒப்புக்கொண்டதாகவும், நாம் இதுவரை அறிந்திருந்த ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் மூளே தெரிவித்தார். ஆர்எஸ்எஸ்ஸைப் பொறுத்தவரை ஜனநாயகம் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், எல்லோருக்கும் அப்படி அல்ல. சில வாரங்களில் மக்களவைக்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த முடிவை இந்திரா காந்தி எடுப்பதற்கு என்ன காரணம் என்று யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், இதன் விளைவாக, சரணடையும் ஆவணத்தில் கையெழுத்திடும் அவசியம், அதிர்ஷ்டவசமாக ஆர்எஸ்எஸ்ஸுக்கு ஏற்படவில்லை.
அழுத்தம் தந்த ஜிம் கார்ட்டர்
மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடவும் நெருக்கடி நிலையை விலக்கிக்கொள்ளவும் ஒருங்கமைக்கப்படாத சக்திகளின் கூட்டு இந்திரா காந்தியை நிர்ப்பந்தித்தது. வெளிநாடுகளில் எனது பிரச்சாரம் மற்றும் அமெரிக்காவின் அறிவுஜீவிகளிடம் எனக்கு இருந்த தொடர்பின் மூலம் அமெரிக்காவின் அதிகாரமட்டத்தின் கவனத்தை, குறிப்பாக புதிதாகப் பதவியேற்ற அதிபர் ஜிம் கார்ட்டரின் கவனத்தை ஈர்க்க முடிந்தது. பதவிப் பிரமாணம் ஏற்பதற்கு முன்னரே, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்திய அரசுக்கு அழுத்தம் தரத் தொடங்கினார் ஜிம் கார்ட்டர். அது இந்திரா காந்தியை அசைத்துப் பார்த்தது.
இந்த விஷயத்தில் அதிகம் பேசப்படாத இன்னொரு நாயகன், தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. நெருக்கடி நிலையை விலக்கிக்கொள்ளுமாறு இந்திரா காந்தியை அவர் தூண்டினார். நெருக்கடி நிலையை அமல்படுத்தியது தவறு என்று தனது அந்தராத்மா கூறுவதை இந்திரா காந்தி ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
காஞ்சி மடத்தின் நிராகரிப்பு
இந்திரா காந்திக்கு அதிக வலி ஏற்படுத்தியது, காஞ்சி மடத்தின் பரமாச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதியிடம் ஆசி வேண்டிச் சென்றிருந்ததுபோது ஏற்பட்ட அனுபவம்தான். 90 நிமிடங்களுக்கு இந்திரா காந்தியைப் பார்க்கவே மறுத்துவிட்ட அவர், அதன் மூலம் நெருக்கடி நிலையை முற்றிலுமாகத் தான் நிராகரித்ததை இந்திரா காந்திக்கு உணர்த்தினார்.
மொரார்ஜி போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டார். நெருக்கடி நிலையின் மூலம் கொஞ்சமாவது நல்ல விஷயங்கள் நடந்தன என்று ஒரு மரியாதைக்காக ஒப்புக்கொள்ளுமாறு இந்திரா காந்தியின் தூதர்கள் கெஞ்சியதையும் அவர் நிராகரித்துவிட்டார்.
இந்திரா காந்தி தேர்தலை அறிவித்தபோது, வன்முறை வழியில் தோல்வியடைந்தவர்கள் தேர்தலைப் புறக்கணிக்க விரும்பினார்கள். ஜனநாயகம் தொடர்பான பிரச்சினைகளால் படிப்பறிவில்லாத பொதுமக்கள் வருத்தமடைந்திருக்க மாட்டார்கள் என்றும் இப்படியான சூழலில் எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர்கள் கருதினார்கள். இதன் மூலம் தேர்தல் முடிவுகள் நெருக்கடி நிலையை ஆதரிப்பதாகவே அமையும் என்றும் நம்பினார்கள். ஆனால், மொரார்ஜி தேசாயும் சரண் சிங்கும் அப்படி நினைக்கவில்லை. மக்கள்மீது அவர்கள் பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
இந்தியச் சமூகத்தின் பன்முகத் தன்மைதான் மக்களைச் சர்வாதிகாரத்துக்கு எதிராகப் புரட்சி செய்ய வைத்தது. முற்றிலும் வேறுபட்ட பிரிவினரை ஒன்றுக்கொன்று ஈர்க்கும் அம்சம்தான் இந்தியாவை ஒரு ஜனநாயகச் சமூகமாக வைத்திருக்கிறது. சமூகத்தின் இந்தக் கலவையான இயல்பு இருக்கும்வரை இந்திய ஜனநாயகம் உயிர்த்திருக்கும் என்பதுதான் நெருக்கடி நிலையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இந்தியச் சமூகத்தின் ஒற்றைப்படைத்தன்மையை ஒரு அளவுக்கு மேல் வலியுறுத்துவது ஜனநாயகத்துக்கு ஆபத்தாகிவிடும்.
கன்னாவை நினவிருக்கிறதா?
நெருக்கடி நிலையின்போது அதை எதிர்த்துப் போராடக்கூடிய இடத்தில் இருந்த குறிப்பிடத் தக்க மனிதர்கள் அதற்கு எதிராகப் போராடவில்லை. இன்று மக்கள் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்கள் நம்மிடையே இல்லை. அடிப்படை உரிமைகளை நீதித் துறை வாயிலாக நசுக்குவதற்குப் பதிலாக, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கான வாய்ப்பை இழக்கவே விரும்பினார் ஹெச்.ஆர். கன்னா. யாருக்கேனும் அவரை நினைவிருக்கிறதா?
1975-77 காலகட்டத்தைவிட இன்று நெருக்கடி நிலையை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு நாம் பலவீனமாக இருக்கிறோம். முதல் காரணம், சுதந்திரப் போராட்டத்தின் சாதி வேறுபாடற்ற தலைவர்கள் இப்போது நம்மிடையே இல்லை. அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் இடத்தில் பாசிஸ நிறுவனம் இருக்கிறது என்பது மற்றொரு காரணம். இந்த நிறுவனம் பல லும்பன் அமைப்புகளை உருவாக்கியிருக்கிறது. இந்த அமைப்புகள், மதத் தூதர்களைக் கொல்லவும் தயங்காதவை.
இன்று மெல்ல இயங்கும் நெருக்கடி நிலையால் அமைப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதற்கான எல்லா வித அறிகுறிகளும் தென்படுகின்றன. நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்தைக் கொண்டாட பாஜக முடிவுசெய்திருப்பது ஏன் அபத்தமானது என்பதற்கான முக்கியமான காரணம் இது. அரசியல் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதைவிட, அதை மாற்றியமைக்கத்தான் பாஜக திட்டமிடுகிறது. வரலாற்றை மாற்றி எழுதும் வேலைகளை அக்கட்சி தொடங்கிவிட்டது. பாஜக-வின் கிளை அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்றவை சமூகத்தின் சிறுபான்மையினர் மீது பயங்கரமான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றன.
ஆக, 25 ஆண்டுகள் கழித்தும் நாம் ஜனநாயகத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதுடன் அந்தச் சவாலைப் புறக்கணித்துவிடவும் முடியாது. அது இன்று மறைமுகமாக முற்றுகையிடப்பட்டிருக்கிறது. ‘நிலையான கண்காணிப்பே விடுதலைக்குக் கொடுக்கும் விலை’ என்று அமெரிக்கப் புரட்சியாளர் பேட்ரிக் ஹென்றி கூறியிருக்கிறார். எனவே, நம்மில் யாரெல்லாம் எதிர்த்து நிற்க முடியுமோ அவர்கள் அதை இப்போதே செய்ய வேண்டும். இதுதான் நெருக்கடி நிலையின் பாடம்.
அடல் பிஹாரி வாஜ்பாயும் இந்திரா காந்திக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். அதை இந்திரா ஏற்றுக் கொண்டார். உண்மையில், 20 மாதங்கள் அமலில் இருந்த நெருக்கடி நிலையின்போது பெரும்பாலான சமயங்களில் பரோலில் வெளியில் வந்தார் வாஜ்பாய். அரசுக்கு எதிரான எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கப்போவதில்லை என்று எழுத்துபூர்வமாக இந்திரா காந்திக்கு அவர் உறுதியளித்திருந்தார்.
தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்
2000-ல் நெருக்கடி நிலையின் 25-வது ஆண்டு நிறைவடைந்தபோது, பாஜக-வின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்து 13.06.2000-ல் ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழில் சுப்பிரமணியன் சுவாமி எழுதிய கட்டுரை.

என்னவாகட்டுமே, உண்மை வெளிவரட்டும்!


தகவல் என்பது அறிவு அல்ல என்று சொல்வார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். உண்மைதான். அதேசமயம், தகவல் ஒரு பெரும் அரசியல். சொல்லப்படும் தகவல்களைவிட சொல்லப்படாத தகவல்கள் கூடுதல் அரசியல் பெறுமதி உடையவை. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, சாதிவாரியாக நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் விவரங்களைச் சமூகப் பின்னணியுடன் வெளியிடுவதில் மோடி அரசுக்கு என்ன சிக்கல்?
நேற்று முன்தினம் ‘வெல்த் எக்ஸ்’ நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. “அடுத்த மூன்று ஆண்டுகளில் - 2018-ல் இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 4.37 லட்சமாக உயரும்” என்றும் “இந்த எண்ணிக்கை அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளில் - 2023-ல் அப்படியே இரட்டிப்பாகும்” என்றும் தெரிவிக்கிறது அந்த ஆய்வறிக்கை. இது நடக்கச் சாத்தியமற்ற கதை அல்ல என்பதற்குச் சில மாதங்களுக்கு முன் வெளியான ‘நியூ வேர்ல்ட் வெல்த்’ அமைப்பின் ஆய்வறிக்கை ஒரு சான்று. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு வேகமாக அதிகரித்திருக்கிறது என்பதைப் பட்டியலிட்ட அந்த ஆய்வறிக்கை பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை புணேவில் மட்டும் 317% அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டியது.
ஒருபக்கம் நாடு வளர்கிறது, பொருளாதாரம் மேல் நோக்கி எழுகிறது என்றெல்லாம் இதுபோன்ற தகவல்கள் வாயிலாக நமக்குச் சொல்லப்படும் சூழலில்தான், மறுபக்கம் தலைகீழான வேறு தகவல்களும் வெளியாகின்றன. எந்த அரசாங்கம் பொருளாதாரம் மேலே போய்க்கொண்டிருப்பதாகச் சொல்கிறதோ, அதே அரசாங்கம் தொகுத்த தகவல்கள் அமிலச் சொட்டுகளாக நம் மீது விழுந்து அதிரவைக்கின்றன.
சரிபாதி வறிய இந்தியா
இந்தியாவின் ஆன்மா எங்கிருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறோமோ, அந்தக் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 49% பேர் வறுமையில் இருக்கிறார்கள் என்கிறது. இந்திய அரசின் ‘சமூகப்பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு 2011'-ன் அறிக்கை. கிராமப்புற இந்தியாவில் உள்ள 17.91 கோடிக் குடும்பங்களில், 10.08 கோடிக் குடும்பங்களுக்கு (56%) சொந்தமாக ஒரு பிடி நிலம் கிடையாது. 13.34 கோடிக் குடும்பங்கள் (74.5%) ரூ.5000-க்கும் குறைவான வருமானத்திலேயே பிழைக்கின்றன. 9.16 கோடிக் குடும்பங்கள் (51%) வருமானத்துக்கு உடல் உழைப்பு வேலைகளையே நம்பியிருக்கின்றன. 5.39 கோடிக் குடும்பங்கள் (30%) விவசாய வேலைகளை நம்பியிருக்கின்றன. 4.21 கோடிக் குடும்பங்கள் (23.5%) இன்னமும் எழுத்தறிவு அற்றவை. கிட்டத்தட்ட 2.37 கோடிக் குடும்பங்கள் (13.25%) சுற்றிலும் மண் சுவர் எழுப்பி, ஒப்புக்கு மேலே கூரைபோல மஞ்சம் புல்லையோ, தென்னை ஓலைகளையோ கொண்டு மூடிய, கதவுகள் அற்ற அல்லது கோணிச் சாக்கு போன்றவற்றைக் கதவுபோல மூடிய கச்சா வீடுகளிலேயே வசிக்கின்றன.
நகர்ப்புற இந்தியாவின் நிலைமை கொஞ்சம் மேம்பட்டது என்றாலும், அங்கும் அவலங்கள் வேறு முகங்களில் வெளிப்படுகின்றன. நகர்ப்புறங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 6.5 கோடிக் குடும்பங்களில், 65 லட்சம் குடும்பங்களை (10%) அடிப்படை வசதியான குடிநீர் வசதியே இன்னமும் எட்டவில்லை எனும் ஒரு தகவல் போதுமானது, நம்முடைய நகர்ப்புற ஏழைகளின் நிலையைச் சொல்ல. குடிநீரில் தொடங்கி குடியிருப்பு, வேலைவாய்ப்பு, சுகாதாரம் என்று ஒவ்வொரு காரணிகளும் நகர்ப்புறப் பெரும்பான்மை இந்தியர்களை வேட்டையாடும் கதையைச் சொல்கின்றன.
யார் அந்தக் குப்பை பொறுக்கிகள்?
இந்தியச் சமூகக் கட்டுமானத்தின் ஒவ்வொரு நரம்புகளும் சாதிய அதிகார அடுக்குகளால் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் பிறக்கும் ஒரு குழந்தையின் உணவு, உடை, வாழ்விடம், கல்வி, தொழில், திருமணம், எதிர்காலம் என யாவுமே அந்தக் குழந்தையின் சாதியுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. அதனால், சாதியின் பெயரால் காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்களையும் பின்தள்ளப்பட்டவர்களையும் தூக்கிவிட இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிக்கான வழிகளை நாம் தேடுகிறோம். ஆனால் உண்மையில், அரசின் சமூகநலத் திட்டங்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சென்றடைந்திருக்கின்றன? இதுவரை அளிக்கப்பட்டிருக்கும் சமூகநீதித் திட்டங்கள் எந்த அளவுக்குப் போதுமானவையாக இருந்திருக்கின்றன? இதற்கான நிச்சயமான பதில்கள் நம்மிடம் இல்லை.
டெல்லியில் மட்டும் 3 லட்சம் பேர் குப்பை பொறுக்கிப் பிழைக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால், வெளியிலிருந்து தம் வீட்டுக்கு வரும் ஒரு அலுவலரிடம், “என் குழந்தைகள் குப்பை பொறுக்குகிறார்கள்; அதை வைத்துத்தான் பிழைக்கிறோம்” என்றோ, “என்னுடைய வீட்டுக்காரர் பிச்சை எடுக்கிறார்; அதை வைத்துத்தான் நாங்கள் பிழைக்கிறோம்” என்றோ எத்தனை பேர் நம்முடைய சமூகச் சூழலில் சொல்லிவிடுவார்கள்? கிராமப்புற இந்தியாவில் குறைந்தது, 4.08 லட்சம் குடும்பங்கள் குப்பை பொறுக்கிப் பிழைப்பதாகவும் 6.6 லட்சம் குடும்பங்கள் பிச்சையை நம்பிப் பிழைப்பதாகவும் இந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
சுதந்திரத்துக்கு 67 ஆண்டுகளுக்குப் பின்னரும் இடஒதுக்கீடு தேவையா என்று கேள்வி கேட்பவர்கள் இருக்கிறார்கள். பொருளாதாரரீதியிலான இடஒதுக்கீட்டுக்குக் குரல் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். சுதந்திரத்துக்கு 67 ஆண்டுகளுக்குப் பின்னரும், பிச்சையையும் குப்பையையும் பிழைப்புக்கு வழியாக நம்பி வாழ்பவர்கள் எந்தெந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய இந்நிலைக்கான அடிப்படையான காரணங்கள் என்ன, அந்தக் காரணங்களில் சமூகம்சார் காரணிகள் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதெல்லாம் நமக்குத் தெரிய வேண்டாமா?
மத்திய - மாநில அரசுகள் செய்வதென்ன?
சாதிவாரியிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரம் வெளியிடப்பட்டால், இந்தியாவில் அழுத்தப்பட்ட மக்களின் நிலை எப்படி இருக்கிறது என்பது மட்டும் வெளிவரப்போவதில்லை; மாநிலங்களுக்கு மாநிலம் அவர்களுடைய நிலைமை எப்படியெல்லாம் மாறுபடுகிறது என்கிற விவரங்களும் வெளியே வரும். கூடவே, ஆதிக்க அரசியல்வாதிகளின் உண்மையான முகமும் வெளியேவரும்.
இதே காலகட்டத்தில் வெளியாகியிருக்கும் யுனிசெப் அமைப்பின் ‘குழந்தைகள் தொடர்பான துரித ஆய்வறிக்கை’யின் தரவுகள் இதற்குச் சரியான உதாரணம். அரசின் ஆய்வறிக்கையோடு, இந்த ஆய்வறிக்கையை ஒப்பிடும்போது குஜராத், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களின் குழந்தைகளைக் காட்டிலும் தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட குழந்தைகளின் நிலை மேம்பட்டதாக இருப்பது தெரியவருகிறது. அதாவது, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை மோசம்; எல்லா மாநிலங்களிலும் பெரும்பாலும் அவர்கள் கடைசி அடுக்கிலேயே இருக்கிறார்கள் என்றாலும், மாநிலங்களுக்கு மாநிலம் அவர்களுடைய சமூகப் பொருளாதாரச் சூழலில் மாறுபாடு இருக்கிறது என்கிற உண்மையை ‘யுனிசெப்’ அறிக்கை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட குழந்தைகளைக் காட்டிலும் சத்தீஸ்கரில் உள்ள பெரும்பான்மைக் குழந்தைகள் மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்ற உண்மை வெளியே வரும்போதுதான், முட்டை அரசியலின் முக்கியத்துவம் வெளியே வரும். தமிழகப் பள்ளிகளில் மதிய உணவில் ஐந்து முட்டைகள் வழங்கப்படுவதற்கும் சத்தீஸ்கரில் சைவத்தின் பெயரால் முட்டையே மறுக்கப்படுவதற்கும் பின்னணியிலுள்ள அரசியல் வெளியேவரும். ‘குஜராத் மாதிரி’ என்று வளர்ச்சிக்கு உதாரணமாகக் கொண்டாடப்பட்ட குஜராத்தைக் காட்டிலும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை உயர்ந்திருக்கும் உண்மை வெளியே வரும்போதுதான், எந்த வளர்ச்சி உண்மையான வளர்ச்சி, யாருக்கான வளர்ச்சி உண்மையான வளர்ச்சி எனும் சமூகநீதி அரசியலின் முக்கியத்துவம் வெளியே வரும்.
குடிநீர் முதல் சுடுகாடு வரை சாதி ஆதிக்கம் செலுத்தும் ஒரு நாட்டில், ‘சாதி மறுப்பு’ அல்லது ‘சமூக நல்லிணக்க நோக்கம்’ என்ற பெயரில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதிரீயிலான விவரங்களை மறைப்பது போன்ற அபத்தம் வேறு இல்லை. மோடி அரசு சாதிவாரியிலான தகவல்களை உடனே வெளியிட வேண்டும்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

இணையகளம்: மோடி ரசிகர் கதை தெரியுமா?

2014, மே 16 அன்று முழுப் பெரும் பான்மையுடன் பாஜக தேர்தலில் வென்றதை அறிந்த ஒரு மோடி ரசிகர் ஆனந்தக் கூத்தாடி, மயங்கி விழுந்து, கோமா நிலைக்குப் போய்விட்டார். சமீபத்தில் திடீரென்று கோமாவில் இருந்து, சுய நினைவுக்கு வந்தார்.
14 மாதங்கள் கடந்துவிட்டதை அறிந்த பின்னர், மருத்துவரிடம் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்...
டாக்டர், ஊழலற்ற இந்தியாவுல இருக்கறது எப்படி இருக்குது?
ராபர்ட் வதேரா எந்த சிறையில் இருக்காரு?
ராகுல், சோனியா சிறையில் இருக்காங்களா அல்லது இத்தாலிக்குத் தப்பி ஓடிட்டாங்களா?
நான் லக்னோ போகணும்; புல்லட் ரயில், விமானம் எது மலிவா இருக்குது?
சுவிஸ் வங்கிகளில் இருந்து நம்ம நாட்டுக்கு எவ்வளவு கறுப்புப் பணம் திரும்பி வந்தது?
ஒவ்வொரு இந்தியரும் மோடியிடமிருந்து 15 லட்சங்கள் பெற்ற பிறகு, ‘வறுமை' சுத்தமா ஒழிஞ்சிருக்குமே?
அமெரிக்க டாலரின் மதிப்பு 35 ரூபாய்க்கு வந்துடுச்சா?
பெட்ரோல், டீசல், கேஸ், தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு எல்லாம் விலை குறைஞ்சி இந்தியர் கள் சந்தோஷமா இருக்காங்களா?
பாகிஸ்தான் பயந்து நடுங்கி, தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பிய பிறகு அவருக்கு என்ன ஆச்சு?
விவசாயிகள்கிட்ட இருந்து காங்கிரஸ் வலுக்கட்டாயமா அபகரித்த நிலங்களை மோடி அவங்ககிட்டயே திருப்பிக் கொடுத்துட்டதால விவசாயிகள் மகிழ்ச்சியா இருக்கறாங்களா?
- சரமாரியாக இவ்வளவு கேள்விகளைச் சமாளிக்க முடியாத மருத்துவர் பாவம் கோமா நிலைக்குப் போய்விட்டார்!
வாட்ஸ்-அப்பில் வந்தது...

காமராஜர் காலம் ஏன் பொற்காலம்?

1956-ல் தமிழகத்துக்கு வருகைதந்த வினோபா பாவேவைத் திருவள்ளூர் அருகே வரவேற்கிறார் முதல்வர் காமராஜர்.
1956-ல் தமிழகத்துக்கு வருகைதந்த வினோபா பாவேவைத் திருவள்ளூர் அருகே வரவேற்கிறார் முதல்வர் காமராஜர்.
காமராஜர் ஆட்சிக் காலகட்டத்தைத் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும்போது, பலரும் ஏதோ அதை வெற்றுப் புகழாரம்போலவே இன்றைக்கு நினைக்கின்றனர். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த காங்கிரஸார் பலருக்குமேகூட அந்த வார்த்தைகளின் பின்னால் உள்ள பெறுமதி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தது காமராஜர் ஆட்சியில்!” இப்படிக் கூறியவர் யார் தெரியுமா? தந்தை பெரியார். உண்மையில், காமராஜர் ஆண்ட அந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்தில் என்ன நடந்தது? ஏன் வரலாறு தெரிந்தவர்கள் இன்றைக்கும் அதைப் பொற்கால ஆட்சி என்று கூறுகின்றனர்? முக்கியமான சில பதிவுகளை மட்டும் தருகிறேன்.
இன்றைக்கு தமிழக அரசின் 2014-15-ம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் தொகை ரூ. 1.27 லட்சம் கோடி. ஆனால், காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்ற 1954-55-ல் மொத்த பட்ஜெட் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.47.18 கோடி. அவர் பதவி விலகியபோது 1962-63-ல் ரூ.121.81 கோடி. அன்றைக்கெல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவுமே ஏழை தேசம்தான். இப்படிப்பட்ட பின்னணியில்தான் மகத்தான காரியங்களை காமராஜர் தன் ஆட்சியில் மேற்கொண்டார். அவருடைய சாதனைகளைப் படிக்கும் முன், அன்றைய தமிழகத்தின் இந்த மொத்த நிதியாதாரப் பின்னணியை நாம் கருத்தில் கொள்வது முக்கியம்.
முதல் திருத்தத்தின் மூலவர்
தமிழகத்தில் நீண்டகாலமாக அமலில் இருந்த, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் ‘கம்யூனல் ஜி.ஓ.’ செல்லாது என சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பு கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. இந்நிலைமையை நன்கு உணர்ந்த காமராஜர், பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவர வித்திட்டார். அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே 1951-ல் அதில் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்து, பின்தங்கிய சமுதாய மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் பெற்றுவந்த இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுத் தந்தவர் காமராஜர். இதனால் அவரை ‘முதல் திருத்தத்தின் மூலவர்’ என்று தமிழகம் போற்றிப் பாராட்டி அழைத்துப் பெருமிதம் கொண்டது.
சமூக நீதிக்கான ஆட்சி
தமிழகத்தின் முதலமைச்சராக ஏப்ரல் 13, 1954-ல் பொறுப்பேற்ற காமராஜர், அக்டோபர் 2, 1963 வரை ஒன்பதரை ஆண்டு காலம் ஆட்சி செய்தார். முதலில் எட்டு, பிறகு ஒன்பது அமைச்சர்களோடும் எளிமையான, நேர்மை யான ஆட்சி நடத்தினார். தமது முதல் அமைச்சரவையை உருவாக்கும்போது, ஹரிஜனத் தலைவரான பி.பரமேசு வரனுக்கு இந்து அறநிலையத் துறையை அளித்தார். உழைப்பாளர் கட்சித் தலைவரான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியைக் காங்கிரஸில் இணைத்து, அமைச்சர் பொறுப்பு வழங்கி, பின்தங்கிய மக்களை முன்னேற்றப் பாதையில் பயணம் செய்ய வழிவகுத்தார்.
கல்விப் புரட்சி
காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையே குலக்கல்விமுறை ஒழிப்புதான். “சிலர் பரம்பரைத் தொழிலையே செய்து வர வேண்டும் என்கிறார்கள். நாம் கீழேயே இருக்க வேண்டுமாம். நம்மைப் படிக்காதவர்களாக வைத்திருந்து, நாம் ரோடு போடவும், கல் உடைக்கவும், ஏர் ஓட்டவும், சேறு சகதியில் நாற்று நடவும் பயன்பட வேண்டுமாம்.
காட்பாடி பள்ளிக்கூட ஏழைக் குழந்தைகளுக்கு உணவு பரிமாறுகிறார் காமராஜர்.
அவர்கள் மட்டும் நகத்தில் மண் படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம். எப்படியிருக்கிறது நியாயம்? நாமும் படித்து, நாலு தொழில் செய்து முன்னேற வேண்டாமா?” என்று நறுக்குத் தெறித்தார்போல் கூறினார்.
எந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி என்ற சொத்தை வழங்கி, வாழ்க்கையில் முன்னேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசக் கல்வியையும், மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்தார். இதனால் 1957-ல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962-ல் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,995 ஆனது.
தொழில் வளர்ச்சி
ஜவாஹர்லால் நேரு ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முதலாவது, இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களின் முழுப் பலனையும் தமிழகம் பெற்று முன்னேறும் வகையில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக தமிழகத்தில் தொழில் புரட்சி நடந்தது. சென்னை - பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, சென்னை, கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை, திருச்சி, திருவெறும்பூரில் உயர் அழுத்த கொதிகலன் தொழிற்சாலை (BHEL) அமைய 750 ஏக்கர் பட்டா நிலமும், 2,400 ஏக்கர் புறம்போக்கு நிலமும் வழங்கப்பட்டன.
1958-ல் கிண்டி தொழிற்பேட்டையைப் பார்வையிட வந்த பிரதமர் நேருவுடன்...
இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்று, பொதுத் துறை நிறுவனங்களிலேயே அதிக லாபத்தைத் தருகிற ‘மகாநவரத்தினா’என்ற தகுதியை பெற்றுள்ளது பெல் நிறுவனம். பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட ஆவடி டாங்க் ஃபேக்டரி தொழில் வளர்ச்சியில் அரசுத் துறையோடு, தனியார் துறையும் இணைந்து பல தொழில்கள் தொடங்கப்பட்டன. ‘மதராஸ் இண்டஸ்டிரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன், அசோக் லேலண்ட் தொழிற்சாலை, டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலை, சிம்சன், இந்தியா பிஸ்டன்ஸ், டி.வி.எஸ், லூகாஸ் இவையெல்லாம் அந்தக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டவைதான். 1951-ல் தமிழகத்தில் 71-ஆக இருந்த நெசவாலைகளின் எண்ணிக்கை, 1962 முடிவில் 134-ஆகப் பெருகியது. அதேபோன்று கூட்டுறவுத் துறையில் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டன. சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து எட்டாக உயர்ந்தது. இவற்றின் உற்பத்தி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 டன்.
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, கூடுதலாகப் பல சர்க்கரை ஆலைகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆண்டொன்றுக்கு 20 ஆயிரம் டன் காகிதம் உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை ஈரோடு அருகே பள்ளிபாளையத்தில் சேஷசாயி காகிதம் மற்றும் போர்டுகள் லிமிடெட் நிறுவனம் தொடங்கியது. அதே போன்று, மாநிலத்தில் கூடுதலாக காகிதக்கூழ் மற்றும் வைக்கோல் அட்டைகள் தயாரிக்க எட்டு ஆலைகள் தொடங்குவதற்கு உரிமை வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் மதுக்கரை, திருச்சி மாவட்டம் டால்மியாபுரம், ராமநாதபுர மாவட்டம் துலுக்கப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து என நான்கு சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகள் தொடங்கப்பட்டன.
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது ‘மெட்ராஸ் சிமெண்ட்ஸ் லிமிடெட்’ என்ற ஒரு புதிய சிமெண்ட் ஆலை ராஜபாளையத்தில் தொடங்கப்பட்டது. 1962-ல் சேலம், சங்கரிதுர்க்கம் என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டது. கரூரில் மற்றொரு ஆலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொழிற்பேட்டைகள்
காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வழங்கவும் தொழிற்பேட்டைகள் சென்னை, கிண்டி, விருதுநகரில் தொடங்கப்பட்டன. இவற்றின் பயன்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து கும்பகோணம், விருத்தாசலம், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கோவில்பட்டி, ராஜ பாளையம், நாகார்கோவில், சென்னையை அடுத்த அம்பத்தூர் போன்ற இடங்களில் இத்தகைய தொழிற் பேட்டைகளை உருவாக்குதவற்காக ரூ.4.08 கோடி ஒதுக்கப் பட்டது. இவற்றைத் தவிர மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் மார்த்தாண்டம் (கன்னியா குமரி) ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப் பட்டன. சென்னை அம்பத்தூரில் தொழிற்பேட்டை தொடங்கி 1,200 ஏக்கர் நிலம் வழங்கி இடஒதுக்கீட்டுடன் 400 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டன.
பாசனத் திட்டங்கள்
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழகம் தனது நீர்வளத்தைப் பெருக்க உரிய பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக காமராஜர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றின் பயனாக கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டுர் கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை திட்டம், சாத்தனூர் திட்டம், கிருஷ்ணகிரி திட்டம், 30 லட்ச ரூபாய் மதிப்பிலான காவிரி கழிமுக வடிகால் திட்டம் ஆகியவை உருவாகின.
கன்னியாகுமரி மாவட்டம் விளாத்துறையில் இறவைப் பாசனத் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.
இவை தவிர, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம், வீடூர் நீர்த்தேக்கத் திட்டம், கொடையாறு வாய்க்கால் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் ஆகிய ஏழு புதிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின்போது, மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய திட்டம். இது கிட்டத்தட்ட ரூ. 30 கோடி செலவில் நீர்ப்பாசனத்தோடு மின்சாரம் வழங்கும் பல்நோக்குத் திட்டமாகும். கோவை மாவட்டத்தில் 2.4 லட்சம் ஏக்கர் நில பரப்புக்கும் நீர்ப்பாசன வசதி வழங்குவதோடு, 1.80 லட்சம் கிலோவாட் திறன்கொண்ட மின்உற்பத்தி செய்யும் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதே இத்திட்டம். அம்மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம் ஆகிய பகுதிகளுக்கு இத்திட்டம் நீர்ப்பாசன வசதி செய்கிறது. அண்டை மாநிலங்களோடு நல்லுறவு இருந்தால் இத்தகைய நதிநீர்ப் பகிர்வுத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பதற்கு இத்திட்டம் சிறந்த எடுத்துக்காட்டு.
மின்உற்பத்தி
காமராஜர் ஆட்சிக்காலத்தில் மின்உற்பத்தியில் வியக்கத் தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மின்உற்பத்தியிலும், அதைப் பயன்படுத்துவதிலும் சென்னை மாகாணம் இந்தியாவில் மூன்றாவது இடத்தை வகித்தது. காமராஜர் ஆட்சியில்தான் பெரியார் நீர்மின்உற்பத்தித் திட்டம், குந்தா நீர்மின்உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது. நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் ரூ. 86 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியில் மகத்தான சாதனைகள் நிகழ்ந்தன. இன்று ரூ.1,500 கோடிக்கும்மேல் லாபம் ஈட்டித்தரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்துள்ளது.
மின் உற்பத்திக் கருவியைப் பார்வையிடும் காமராஜர்…
சென்னை மாகாணத்தின் மின்பற்றாக்குறையைச் சமாளிப் பதற்காக 5 லட்சம் கிலோவாட் மின்உற்பத்தித் திறன்கொண்ட அணுமின் நிலையத்தைக் கல்பாக்கத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட காமராஜர், இந்திய அரசின் அணுமின் உற்பத்தித் துறையை அணுகி, இத்திட்டத்தைப் பெறுவதில் வெற்றிகண்டார். அதன் பயன்களைத் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இன்று அனுபவித்துவருகின்றன.
நிலச் சீர்திருத்தம்
காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குத்தகைதாரர்களின் பாதுகாப்புக்காக, ‘குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் - 1955’ காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தை மேன்மைப்படுத்தும் நடவடிக்கையாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்துக்கும்மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்கும் நில உச்சவரம்புச் சட்டம் 1962-ல் கொண்டுவரப்பட்டது.
பஞ்சாயத்து ராஜ்
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, பஞ்சாயத்து ஆட்சி செயல்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரு தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் காமராஜர் ஆட்சியில் 373 பஞ்சாயத்து யூனியன்களும், 12 ஆயிரம் பஞ்சாயத்துக்களும் தொடங்கப்பட்டுச் செயல்படத் தொடங்கின.
தமிழ் வளர்ச்சி
சென்னை மாகாணத்தின் பட்ஜெட்டை 1957-58-ல் தமிழிலேயே சமர்ப்பித்தார் காமராஜர். 1956-ல் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டுவந்ததும் காமராஜர் ஆட்சியே. 1959 ஜனவரியில், தமிழ் அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராகக் கல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டார். கல்லூரிப் பாடங்களைக் கற்பிக்கும் மொழியாக தமிழைக் கொண்டுவரவும் மலிவான விலையில் உயர் கல்விக்கான பாடநூல்களைத் தமிழில் வெளியிடவும் இந்த அமைப்பு செயல்பட்டது. இத்துடன் ‘தமிழ்ப்பாடநூல் வெளியீட்டுக் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது. தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகையும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன. பாடங்கள் தொடர்பான ஆங்கில நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.
காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி 1960-ல் வெளியிடப்பட்டது. 1956-ல் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டவுடன் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து சட்டமன்றத்தில் 24.2.1961-ல் நடந்த விவாதத்தில் உரையாற்றிய சி.சுப்பிரமணியம், “மெட்ராஸ் ஸ்டேட் என்று குறிப்பிடப்படும் இடத்தில் சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்குப் பதில் தமிழ்நாடு என்று எழுதலாம் என பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’என்று தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
எளிமை நேர்மை - தூய்மை
எல்லாவற்றையும்விட முக்கியமானது இது. காமராஜரின் பொதுவாழ்க்கை எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. முதல்வராக இருந்த காலத்தில் சென்னையில் உள்ள தனது வீட்டில் தனது தாயைக்கூட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேலாகத் தங்க காமராஜர் அனுமதித்ததில்லை. தனது சம்பளத்திலிருந்து மாதம் ரூ.120 கொடுத்து விருதுநகரில்தான் தனது தாயைத் தங்கவைத்திருந்தார். தன்னைச் சுற்றி தனது குடும்பத்தினர், உறவினர் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் என்ற ஒரு செய்தி போதும், கறை படியாத கைகளுக்கு.
பெரியாரின் வார்த்தைகள்
காமராஜர் ஆட்சியைப் பிரதமர் நேரு உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் அனைவருமே மனதாரப் பாராட்டியுள்ளனர். முக்கியமான பாராட்டு, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்த தந்தை பெரியாருடையது. சுமார் ஒன்பதரை ஆண்டு காலம் காமராஜர் ஆட்சியைத் தம் தோள்மீது சுமந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்செய்து பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார் பெரியார்.
1961-ல் தேவகோட்டையில் பேசும்போது, மரண வாக்குமூலம்போலத் தமது உள்ளக்கிடக்கையை தந்தை பெரியார் வெளியிட்டார். அதில், ‘‘தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை.
தோழர்களே நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.”
காமராஜரின் ஆட்சிக் காலம் ஏன் தமிழகத்தின் பொற்காலம் என்பதற்கு இதைவிடவும் சான்று வேண்டுமோ?
- ஆ.கோபண்ணா, பத்திரிகையாளர், தலைவர், காங்கிரஸ் ஊடகத்துறை.
தொடர்புக்கு: desiyamurasu@gmail.com