Saturday, 4 January 2014

மன்னிக்கும் குணம் இருக்கா? உங்களுக்கு இதயநோய் வராது: ஆய்வில் தகவல்

நமக்கு தீமை செய்தவர்களை பழிவாங்கவேண்டும் என்று நினைக்காமல் அவர்களின் தவறுகளை மன்னிக்கும் குணம் படைத்தவர்களுக்கு இதயநோய் உள்ளிட்ட எந்தவித நோய்களும் எட்டிப்பார்க்காது என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மனிதர்களின் மனதிற்கும், உடல்நலத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
200 பேர் பங்கேற்ற அந்த ஆய்வில் 100 பேரிடம் உங்களுக்கு கெடுதல் செய்பவர்கள் மீது நீங்கள் எப்படி ஆத்திரமடைவீர்கள்?, அவரை எப்படி பழிவாங்குவதுபோல் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
மீதமுள்ள 100 பேரிடம் நண்பர் தவறு செய்த பிறகும், அதை மன்னித்து மறந்து விடுவது போன்று கற்பனை செய்துகொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஐந்து நிமிடம் கழித்து அதே சம்பவங்களை மீண்டும் நினைத்து பார்க்க வைத்து அவர்களது ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. நண்பரின் தவறுக்கு ஆத்திரப்பட்ட 100 பேரின் ரத்தம் அளவிற்கு அதிகமாக வேகமாக பாய்ந்தது. மறப்போம், மன்னிப்போம் பாலிசியை கொண்ட 100 பேரின் ரத்த அழுத்தம் நார்மலாக இருந்ததும் தெரிய வந்தது.
இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த குழுவின் தலைமை பேராசிரியர் டாக்டர் பிரிட்டா லார்சன், "மன்னிக்கும் மனம் இல்லாதவர்களின் ரத்த அழுத்தம் ஆத்திரப்படும்போது மட்டுமின்றி நீண்ட நேர பாதிப்பை சந்திக்கிறது. அதனால், அவர்கள் ரத்த கொதிப்புக்கு ஆளாகி இதய நோயை சந்திக்க நேரிடலாம். அதேசமயம் மன்னிக்கும் குணம் கொண்டவர்களுக்கு இதய துடிப்பு சீராக இருந்ததும் மன்னித்ததால் ஏற்பட்ட மன அமைதி காரணமாக இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து அது பலம் அடைந்ததும் சோதனையில் தெரிந்தது. இது நீண்ட கால அடிப்படையில் அவர்களது ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நன்மை தரும்'' என்று கூறியுள்ளார். இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளியாகும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எண்ணம் போல் வாழ்வு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே நமக்கு தீமை செய்தவர்களுக்கும் கூட நன்மையே நினையுங்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

No comments:

Post a Comment